அரசுப் போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, கோவையில் ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக அரசுப் போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படாத ஓய்வூதிய உயர்வு, அகவிலைப்படி உயர்வை உடனே வழங்கக் கோரி மத்திய, மாநில பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துகழக தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், சங்கத்தின் நிர்வாகிகள் அரங்கநாதன், சேதுராமன், கிருஷ்ணமூர்த்தி, சுரேந்திரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறும்போது, “அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதியம், ஓய்வு கால பலன்கள் ஆண்டுக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர்கள் சங்கம், அகில இந்திய பிஎஸ்என்எல் டாட் ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பு, அஞ்சல் ஆர்எம்எஸ் ஓய்வூதியர் சங்கம், போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பு, தமிழ்நாடு வருமானவரி ஓய்வூதியர் சங்கம், தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லூரி ஆசிரியர் சங்கம், எல்ஐசி, ஜிஐசி ஓய்வூதியர் சங்கம் உட்பட பல்வேறு அமைப்புகள் பங்கேற்றன.