“இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் இந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுகதான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ” ‘நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்த்தரமான அரசியலுக்கும் போவார்கள் பாஜகவினர். தங்களது சாதனைகளை சொல்வதற்கு ஏதுமில்லாத காரணத்தினாலே நம்மை பற்றி அவதூறு செய்து அரசியல் நடத்துகிறது பாஜக. மதத்தை, ஆன்மிக உணர்வுகளைத் தூண்டி விட்டு அரசியல் நடத்த பார்க்கிறது. அரசியலையும் ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காத மக்கள் தமிழ் மக்கள் என்பதால் மூச்சு திணறிக்கொண்டிருக்கிறது பாஜக’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

எந்த மொழியில் திமுக பேசுகிறதோ அதே மொழியில் பாஜக பேசவேண்டியது கட்டாயம். பாஜகவின் மக்கள் நல மற்றும் கட்டமைப்பு திட்டங்களினால் தான் தமிழக அரசு நகர்ந்து கொண்டிருக்கிறது. தனக்கென எந்த வருவாய் ஈட்டும் திட்டங்களையும் இந்த ஒன்றரை வருடத்தில் திமுக அரசு முன்னெடுக்கவில்லை. ரம்ஜானுக்கும், கிறிஸ்துமஸுக்கும் வாழ்த்து சொல்லும் முதல்வர் , தீபாவளிக்கும் மற்ற இந்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லாமல் இருப்பதோடு, இந்து நம்பிக்கைகளுக்கு எதிராக, இந்து வழிபாட்டு முறைகளுக்கு எதிராக பேசியதால் இந்துக்கள் கொதித்தெழுந்து விமர்சிப்பதால், தமிழக அரசியலில் மூச்சு திணறிக்கொண்டிருப்பது திமுகதான் என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற எதையும் செய்யும் பாஜக. எந்த கீழ்தரமான அரசியலுக்கும் போவாங்க. மதத்தை, ஆன்மிக உணர்வை தூண்டி அரசியல் செய்ய பார்க்கிறது பாஜக. அரசியலையும், ஆன்மிகத்தையும் எப்போதும் இணைக்காதவர்கள் தமிழக மக்கள் என்பதால்தான் தமிழ்நாட்டில் மூச்சு திணறுகிறது பாஜக” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.