சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் சீட் இருப்பதாகக் கூறி முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் இருப்பதாகக் கூறி, முன்பணம் கேட்டு மோசடி பேர்வழிகள் மாணவர்களுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனர். குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களை குறிவைத்து, முதல் செமஸ்டர் கட்டணத்துடன் 1 லட்சம் ரூபாய் செலுத்தினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அனுப்புவது போல போலியாக இ-மெயில் அனுப்பப்படுவதாக புகார் எழுந்தது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், முன்பணம் கேட்டு வரும் இ-மெயில்கள் போலியானது என்று தெரிவித்துள்ளது. NRI மாணவர்களை குறிவைத்து அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் போலியானது எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.மாணவர் சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற பல்கலைக்கழக இணையதளத்தை மட்டுமே அணுக வேண்டும் என தெரிவித்துள்ள அண்ணா பல்கலைக்கழகம், முதல் செமஸ்டர் கட்டணத்துடன் ரூ.1 லட்சம் கட்டினால் முற்றிலும் இலவசமாக படிக்கலாம் என்று பல மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுப்பியதாக சென்றுள்ள போலி இ-மெயில்கள் பற்றி மாணவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.