இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக்கோரி நாடுமுழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் கொழும்பு நகரில் குவிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் இல்லத்தை நோக்கி திரண்டு வரும் மக்களை தடுக்க முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறி வருகின்றனர். முன்னதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் இருந்து தப்பியோடி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை 1948-ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரைக் கண்டிராத பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. மக்கள் புரட்சியால் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகினார். ரணில் விக்கிரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

இன்னமும் எரிவாயு சிலிண்டர், பெட்ரோல் தட்டுப்பாட்டிலிருந்து இலங்கை மக்கள் மீளவில்லை.
அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டி இலங்கை தலைநகர் கொழும்புவில் பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் இன்று பேரணி நடத்துகின்றனர். இலங்கையில் கோத்தபய ராஜபக்ச அரசுக்கு எதிராக இலங்கையில் இதுவரை நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். 100-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர்.

கடந்தமுறை போன்று வன்முறை ஏற்படலாம் என்பதால், ஆயுதங்களுடன் ஆயிரத்துக்கு அதிகமான பாதுகாப்பு படை பிரிவினர் கொழும்புக்கு வந்திறங்கியுள்ளனர். சுமார் 20,000 பாதுகாப்புப் படையினர் கொழும்புவில் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் ஊராடங்கு உத்தரவை போலீஸார் பிறப்பித்து இருந்தனர்.

 

 

 

அதிபர் மாளிகை முன்பு மக்கள்

ஆனால் போராட்டத்துக்கு தடையில்லை என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதால் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அதேசமயம் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் தொடர் போராட்டம் நடத்த சிவில் உரிமை ஆர்வலர்கள், மதத் தலைவர்கள், கலைஞர்கள் மற்றும் பலர் தலைநகர் கொழும்பின் இயற்கை எழில் சூழ்ந்த கடற்கரைக்கு அருகிலுள்ள உள்ள அதிபர் மாளிகைக்கு அருகில் குழுமியுள்ளனர்.

நாடு முழுவதிலுமிருந்து பேருந்துகள், ரயில்கள் மற்றும் ட்ரக்குகளில் நிரம்பிய ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் கொழும்பு நகரில் குவிந்துள்ளனர். பொருளாதார அழிவில் இருந்து தங்களைப் பாதுகாக்கத் தவறிய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய கொழும்பு வீதிகளில் இறங்கியுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுப்பு மற்றும் தேசியக் கொடிகளை ஏந்தி, ‘கோட்டா வீட்டுக்குப் போ‘ என முழுக்கத்துடன் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோத்தபய ராஜபக்சவின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு அருகிலுள்ள ராணுவத் தடுப்புகளை மக்கள் இரவு உடைத்து உள்ளே புக முற்பட்டனர். இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி எறிந்து அவர்களை விரட்டினர்.

உள்ளே புகுந்த மக்கள்

எனினும் அதிபர் மாளிகை மற்றும் நிதி அமைச்சகம் உட்பட முக்கிய கட்டிடங்களைச் சுற்று பாதுகாப்பு படையினர் வளையம் அமைத்து மறித்துள்ளனர். ஆனால் அவர்களை தாண்டிச் செல்ல மக்கள் முயன்று வருகின்றனர். மக்கள் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.

இதனிடையே இலங்கையின் தலைநகர் கொழும்பில் உள்ள வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதால், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச நேற்று இரவே தனது அதிகாரபூர்வ இல்லத்தை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அவர் ராணுவ முகாமில் அவர்களது பாதுகாப்புடன் குடும்பத்துடன் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் எந்த முகாம் என்ற விவரம் வெளியாகவில்லை.