லாசன்னே: சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற ஹாக்கி பைவ்ஸ் சர்வதேச ஹாக்கித் தொடரில் இந்திய ஆடவர் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

சர்வதேச ஹாக்கி சம்மேளனம் ஒரு அணிக்கு 5 வீரர்களை கொண்ட ஹாக்கி பைவ்ஸ் தொடரை சுவிட்சர்லாந்தின் லாசன்னே நகரில் நடத்தியது. இதன் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டியில் நேற்று முன்தினம் இந்தியா – போலந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 6-4 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

இந்திய அணி சார்பில் 11 மற்றும் 19-வது நிமிடங்களில் பாபி சிங் தாமியும், முகமது ரஹீல் 13 மற்றும் 17-வது நிமிடங்களிலும் சஞ்ஜய் 8-வது நிமிடத்திலும், கேப்டன் குரிந்தர் சிங் 9-வது நிமிடத்திலும் கோல் அடித்து அசத்தினர்.

போலந்து அணி தரப்பில் மேட்யூஸ் நோகோவ்ஸ்கி (முதல் நிமிடம்), ராபர்ட் பாவ்லக் (5-வது நிமிடம்), வோஜ்சிக் ருட்கோவ்ஸ்கி (5-வது நிமிடம்), ஜசெக் குரோவ்ஸ்கி (18-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் 0-3 என பின்தங்கியிருந்தது. முதல் 5 நிமிடங்களிலேயே கடும் பின்னடைவை சந்தித்த போதிலும் அதன் பின்னர் ஆக்ரோஷமாக விளையாடி அடுத்தடுத்து கோல்களை அடித்து போலந்து அணிக்கு கடும் சவால் அளித்து சாம்பியன் பட்டம் வென்றது.