75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ‘அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி’ ஏற்றுவது தொடர்பாக மாணவர்களுக்கு தெரிவிக்க வேண்டும என்று தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி, அனைத்து வீடுகளிலும் ஆகஸ்ட் 13, 14, 15-ம் தேதிகளில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்துவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அதில், “ஆகஸ்ட் 13 முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தும் 75-வது சுதந்திர தின அமுத பெரு விழாவை சிறப்பிக்கவும், அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.