சென்னை: திருவண்ணாமலையில் கிரிவல பாதையையும், மாநில நெடுஞ்சாலையையும் இணைக்கும் இடத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை அமைக்கப்படுவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ் பெறப்பட்டதையடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வேளச்சேரியைச் சேர்ந்த ஜி.கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை கிரிவல பாதையும், மாநில நெடுஞ்சாலையும் இணையும் வேங்கைக்கால் பகுதியில் ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான 92.5 அடி நிலத்தை வாங்கிய ஜீவா கல்வி அறக்கட்டளை, அருகில் உள்ள நிலத்தையும் ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சிலை அமைக்கப்பட உள்ளது.

கிரிவலப் பாதையில் சிலை அமைப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக்கப்படுவர். மேலும் கால்வாய் அமைந்துள்ள அப்பகுதியில், கட்டுமானம் மேற்கொண்டால் நீர் போக்குவரத்து பாதிக்கப்படும் என்று மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஆக்கிரமிப்பு குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

மேலும், குறிப்பிட்ட நிலத்தில் சிலை அமைக்க இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது. இந்த இடைக்கால தடையை நீக்க கோரி ஜீவா கல்வி அறக்கட்டளை மற்றும் திருவண்ணாமலை மாவட்ட திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், சம்பந்தப்பட்ட இடத்திற்கு ஏற்கெனவே பட்டா வழங்கப்பட்டுள்ளது, பட்டா வழங்கியதை எதிர்த்துதான் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து மனுதாரர் வழக்கை திரும்பப் பெற்றதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.