“நியாய விலைக் கடைகளில், பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 13 ஆம் தேதி வரை ரேஷன் கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்,” என, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவத்து உள்ளார்.

தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில், நியாய விலைக் கடைகள் மூலம், தகுதி வாய்ந்த அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். மேலும், அதனுடன், ரொக்கப் பணமும் வழங்கப்படும்.

அந்த வகையில், 2023 ஆம் ஆண்டு வர உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் மக்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை ஆகியவற்றுடன், 1,000 ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என, கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னையில் வரும் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான டோக்கன் வினியோம் பணியும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், “நியாய விலைக் கடைகளில், பொங்கல் பரிசுத் தொகுப்பை வரும் 13 ஆம் தேதி வரை ரேஷன் கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம்,” என, தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி தெரிவத்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அவற்றின் வினியோகத்தை, வரும் 9 ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்காக, குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளில் டோக்கன் வழங்கும் பணி துவங்கி உள்ளது.

வரும் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. டோக்கன் வாங்காதவர்கள், 13 ஆம் தேதி நியாய விலை கடைக்கு சென்று பெற்றுக் கொள்ளலாம். ரேஷன் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்து, பரிசு தொகுப்பு வழங்கப்படும். கரும்பு கொள்முதலில் தவறு நடக்காமல் இருக்க, மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான குழு, விவசாயிகளை சந்தித்து கரும்பு கொள்முதல் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.