ஏமனின் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது.

இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏமன் செய்தித் தொடர்பாளர் பஷிர் உமர் கூறும்போது, “ஏமனின் சாடா நகரில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் இதுவரை 100 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். சிறைச் சாலைகளில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் காட்சிகளை காண முடிகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ஏமன் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப்படைகள் நடத்திய தாக்குதலுக்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. ஏமனில் ஹொடெய்டா நகரை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் நேற்று தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஏமனில் இணைய சேவை பாதிக்கப்பட்டது.

முன்னதாக, ஏமனில் இயங்கும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஐக்கிய அரபு அமீரகத் தலைநகர் அபுதாபியில் திங்கட்கிழமை ட்ரோன் மூலம் அடுத்தடுத்துத் தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த மூவரில் இருவர் இந்தியர்கள். ஒருவர் பாகிஸ்தானியர்.

அபுதாபி விமான நிலையம் அருகே உள்ள முசாஃபா பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் நிறுவனமான ADNOC-ஐ குறிவைத்து இத்தாக்குதலை ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்தினர். ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமன் தலைநகர் சனாவில் சவுதி கூட்டுப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் 12-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து மூன்றாவது நாளாக ஏமனி சவுதிப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக பதற்றம் நீடிக்கிறது.

ஏமன் போர்: தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும், ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

மேலும், ஏமன் தென்பகுதி பிரிவினைவாதிகள், ஏமன் அரசுக்கு எதிராகச் சண்டையிட்டு வந்தனர். ஏமனில் ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் போர் காரணமாக ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. ஏமன் போரில் இதுவரை 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கான மக்கள் பஞ்சத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.