கழுத்து வலி காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த கேப்டன் சுப்மன் கில், கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 2ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, துணை கேப்டன் ரிஷப் பண்ட் முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை வழிநடத்தவுள்ளார். மேலும், ஆடும் லெவனில் கில்லின் இடத்திற்கு இளம் வீரர் சாய் சுதர்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின்போது, முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்கையில் இந்திய அணி கேப்டன் சுப்மன் கில்லுக்குக் கழுத்தில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. வலியால் அவதிப்பட்ட அவர், உடனடியாக ‘ரிட்டயர்ட் ஹர்ட்’ ஆகி வெளியேறினார். பின்னர் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பினார். அதன்பின் அவர் முதல் போட்டியின் மீதமிருந்த ஆட்டத்தில் பங்கேற்கவில்லை.
இந்த நிலையில், சுப்மன் கில் இந்திய அணியுடன் கவுஹாத்திக்கு பயணம் செய்வார் என்றும், அவரது உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிசிசிஐ தெரிவித்திருந்தது. கவுஹாத்தி டெஸ்ட் போட்டி தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், காயத்திலிருந்து முழுமையாக குணமடைய அவருக்கு மேலும் அவகாசம் தேவைப்படுவதால், 2-ஆவது டெஸ்டில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
கேப்டன் சுப்மன் கில் விலகியதைத் தொடர்ந்து, துணை கேப்டனான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட், கவுஹாத்தி டெஸ்டில் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை வழிநடத்தும் வாய்ப்பை அவர் முதல் முறையாகப் பெறுகிறார். முதல் போட்டியில் அடைந்த தோல்வி மற்றும் கேப்டன் விலகல் என நெருக்கடியான சூழலில், பண்ட்டின் கேப்டன்சி அணிக்கு எந்த மாதிரியான உத்வேகத்தை அளிக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில், அணித்தேர்வு காரணமாக சாய் சுதர்சன் ஆடும் லெவனில் இடம்பெறவில்லை. தற்போது சுப்மன் கில் விலகியுள்ளதால், அவருக்குப் பதிலாக இளம் இடது கை பேட்ஸ்மேனான சாய் சுதர்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சன், இந்த வாய்ப்பை எவ்வாறு பயன்படுத்துவார் என்பதைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். முதல் டெஸ்டில் இந்திய பேட்டிங் வரிசை தடுமாறிய நிலையில், சுதர்சனின் வருகை மிடில் ஆர்டருக்கு பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் போட்டியில் 30 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்த இந்திய அணி, இந்த 2-ஆவது போட்டியில் வென்று தொடரைச் சமன் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. புதிய கேப்டன், அணியில் புதிய வீரர் என மாற்றங்களுடன் களமிறங்கும் இந்திய அணி, கவுஹாத்தியில் தென் ஆப்பிரிக்காவுக்குப் பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.. இந்த போட்டி நவ. 22 அன்று கவுஹாத்தியில் தொடங்குகிறது.
Leave a Reply