கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் நேற்று முதல் தொடங்கியது. இதையொட்டி, தேவாலயங்களில் இன்று சிறப்பு ஆராதனைகள் நடைபெறும்.

ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3-ம் நாள் உயிர்த்தெழுந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏசு உயிர்த்தெழுந்த தினத்தை உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள்.
ஈஸ்டர் பெருவிழாவுக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாகவும், அதன் முதல் நாள் சாம்பல் புதன்கிழமையாகவும் அனுசரிக்கப்படும். இந்த 40 நாள் தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் மீன், இறைச்சி, முட்டை முதலான அசைவ உணவுகளை தவிர்த்து விடுவார்கள். அத்துடன், வீடுகளில், திருமணம், புதுமனை புகுவிழா என எந்த விதமான கொண்டாட்ட நிகழ்வுகளையும் நடத்த மாட்டார்கள்.
ஏசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூறும் வண்ணம் தவக்காலத்தின்போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கத்தோலிக்க தேவாலயங்களில் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆலயத்தில் இருந்தும் இறைமக்கள் ஒரு குழுவாக சேர்ந்து முக்கியமான ஆலயங்களுக்கு திருப்பயணம் மேற்கொள்வர்.
இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப். 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. எனவே, அதற்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக அனுசரிக்கப்படும். அந்த வகையில், தவக்காலம் சாம்பல் புதன்கிழமையுடன் இன்று (18-ம் தேதி) தொடங்குகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலியும், சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.
வழிபாட்டின்போது, கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்றுவழங்கப்பட்ட குருத்தோலைகளை எரிப்பதால் கிடைக்கும் சாம்பலை பாதிரியார்கள் “மனிதனே, நீ மண்ணாக இருக்கிறாய். மீண்டும் மண்ணுக்கே திரும்புவாய், மறவாதே” என்று சொல்லியவாறு இறைமக்களின் நெற்றியில் சிலுவை அடையாளமிட்டு பூசுவார்கள்.
