அவதூறு வழக்கின் விசாரணைக்காக உத்தரப் பிரதேசம் சுல்தான்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று நேரில் ஆஜரானார். ராகுல் காந்தி நேற்று காலை 10.40 மணியளவில் சுல்தான்பூர் நீதிமன்றத்திற்குள் நுழைந்து காலை 11.15 மணியளவில் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார்.

இதையடுத்து, ரேபரேலியைச் சேர்ந்த மக்களவை எம்.பி. தனது வாதத்திற்கு ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறும், அடுத்த விசாரணை மார்ச் 9 ஆம் தேதி நீதிமன்றம் நிர்ணயித்துள்ளதாகக் காங்கிரஸ் தலைவரின் வழக்குரைஞர் காஷி பிரசாத் சுக்லா தனியார் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்தார். காங்கிரஸ் ஆதரவாளர்கள் அவரைப் புகழ்ந்து கோஷங்களை எழுப்பினர். ராகுல் சிரித்துக் கொண்டே கூட்டத்தை நோக்கி கையசைத்தபடி வெளியேறினார். நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, காந்தி லக்னோவுக்குப் புறப்பட்டு, அங்கிருந்து டெல்லிக்குத் திரும்புவார் என்று காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்தார். நீதிமன்ற விசாரணைக்கு முன்னதாக, சில உள்ளூர் காங்கிரஸ் தலைவர்கள் சுல்தான்பூரில் ‘சத்யமேவ ஜெயதே’ (உண்மை எப்போதும் வெல்லும்) என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியிருந்தனர்.
2018-ஆம் ஆண்டு கா்நாடக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது ‘அமித் ஷா கொலை வழக்கின் குற்றவாளி’ என சர்ச்சை கருத்தை ராகுல் தெரிவித்ததாக, பாஜகவைச் சேர்ந்த விஜய் மிஸ்ரா என்பவா் சார்பில் 2018-ஆம் ஆண்டு ஆகஸ்டில் ராகுலுக்கு எதிராக உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூா் எம்.பி. எல்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
அப்போது, அமித் ஷா பாஜக தேசியத் தலைவராக இருந்தார். இந்த வழக்கில் ராகுலுக்கு எதிராக கடந்தாண்டு டிசம்பரில் நீதிமன்றம் பிடிஆணை பிறப்பித்தது. அப்போது, உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் இந்திய ஒற்றுமை நீதிப் பயணத்தை மேற்கொண்டிருந்த ராகுல், அந்தப் பயணத்தை நிறுத்திவிட்டு கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி சுல்தான்பூா் எம்.பி., எம்எல்ஏக்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
அதைத் தொடர்ந்து, வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னா் வெவ்வேறு காரணங்களால் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று (பிப்ரவரி 20) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ராகுல் காந்தி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். வழக்கில் ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு நீதிபதி உத்தரவிட்ட நிலையில், அடுத்த விசாரணை மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.