சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் பலப்பரீட்சை

சூப்பர் 8 சுற்று நாளை தொடக்கம்: முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் பலப்பரீட்சை

நாளை தொடங்கும் டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை மேற்கொள்கின்றனர்.

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ஆம் தேதி தொடங்கியது. 20 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த போட்டி தொடரில் இன்றுடன் லீக் ஆட்டம் முடிவடைகிறது. நடப்பு சாம்பியன் இந்தியா, முன்னாள் சாம்பியன் பாகிஸ்தான் (ஏ பிரிவு) ஜிம்பாப்வே, முன்னாள் சாம்பியன் இலங்கை (பி), முன்னாள் சாம்பியன்கள் வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து (சி), தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து (டி) ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், அமெரிக்கா, நெதர்லாந்து, நமீபியா, ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகியவை வெளியேற்றப்பட்டன.

சூப்பர் 8 சுற்று நாளை(பிப்.21) தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. குரூப் 1 பிரிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே ஆகியவையும், குரூப் 2 பிரிவில் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

சூப்பர் 8 சுற்றில் நாளை(பிப்.21) இரவு 7 மணிக்கு கொழும்பில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்து-பாகிஸ்தான் (குரூப் 2) அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இந்த தொடரில் ஒரு போட்டியில் தோற்றன. சூப்பர் 8 சுற்றில் வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும். இதனால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

சாட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சேப்பாக்கத்தில் நடந்த 3 போட்டியிலும் (ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா) வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் (7 விக்கெட்) தோற்றது.

சல்மான் ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி நெதர்லாந்து (3 விக்கெட்), அமெரிக்கா (32 ரன்) நமீபியா (102 ரன்) ஆகியவற்றை வீழ்த்தியது. இந்தியாவிடம் 61 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இலங்கையில் தொடர்ந்து ஆடி வருவது அந்த அணிக்கு சாதகமாக சூழலாகும். அதே நேரத்தில் நியூசிலாந்து அணி எந்த ஆடுகளத்திலும் சிறப்பாக விளையாட கூடியது. 20 ஓவரில் இரு அணிகளும் 49 போட்டியில் மோதியுள்ளன. இதில் நியூசிலாந்து 23-ல், பாகிஸ்தான் 24-ல் வெற்றி பெற்றுள்ளன. 2 போட்டி முடிவு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.