ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: ஐபிஎல் உரிமையாளர்கள் அதிரடி

ஹண்ட்ரட் தொடரில் பாகிஸ்தான் வீரர்களுக்கு தடை: ஐபிஎல் உரிமையாளர்கள் அதிரடி

‘தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடரில், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ள அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தின் புகழ்பெற்ற ‘தி ஹண்ட்ரட்’ தொடரின் எட்டு அணிகளில், நான்கு அணிகளில் தற்போது இந்திய ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் முதலீடு செய்துள்ளனர். மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் (லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – சஞ்சீவ் கோயங்கா), எம்ஐ லண்டன் (மும்பை இந்தியன்ஸ் – அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம்), சதர்ன் பிரேவ் (டெல்லி கேப்பிடல்ஸ் – ஜிஎம்ஆர் குழுமம்) மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – சன் நெட்வொர்க், காவ்யா மாறன்) ஆகிய நான்கு அணிகளும் கடந்த 2025 அக்டோபர் முதல் ஐபிஎல் உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த நான்கு அணிகளிலும் பாகிஸ்தான் வீரர்கள் யாரும் ஒப்பந்தம் செய்யப்பட மாட்டார்கள் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாட அனுமதிக்கப்படுவதில்லை. இதேபோல், தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் எஸ்ஏ20 தொடரிலும் அனைத்து அணிகளும் ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை என்பதால், அங்கும் ஒரு பாகிஸ்தான் வீரர் கூட விளையாடவில்லை. தற்போது இதே நிலை இங்கிலாந்தின் ‘தி ஹண்ட்ரட்’ தொடரிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது.

பிபிசி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய முதலீடு இருக்கும் லீக் தொடர்களில் பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்யக் கூடாது என்பது ஒரு ‘எழுதப்படாத விதி’யாகவே கடைபிடிக்கப்பட்டு வருவதாக வீரர்களின் முகவர் ஒருவர் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரும், ஐபிஎல் உரிமையாளர்களுடன் தொடர்பில்லாத அணிகள் மட்டுமே பாகிஸ்தான் வீரர்களைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைத் தலைவர் ஜேம்ஸ் ஷெரிடன் கூறுகையில், “தொடரில் வெற்றி பெறக்கூடிய மிகச்சிறந்த அணியைத் தேர்வு செய்வதே எங்கள் குழுவின் ஒரே நோக்கம்” என்று மட்டும் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் செய்தித் தொடர்பாளர் இது குறித்துப் பேசுகையில், “தி ஹண்ட்ரட் தொடர் உலகம் முழுவதிலும் உள்ள வீரர்களை வரவேற்கிறது. சுமார் 18 நாடுகளைச் சேர்ந்த 1000 வீரர்கள் ஏலத்திற்காகப் பதிவு செய்துள்ளனர். இதில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலா 50க்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்” என்று கூறினார்.

கடந்த ஆண்டுகளில் பாகிஸ்தான் வீரர்களான ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷதாப் கான், ஹாரிஸ் ரவுப், முகமது அமீர் மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் ‘தி ஹண்ட்ரட்’ தொடரில் விளையாடியுள்ளனர். ஆனால், தற்போது ஐபிஎல் உரிமையாளர்களின் வருகைக்குப் பிறகு, அவர்கள் இந்த நான்கு முக்கிய அணிகளால் புறக்கணிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐஎல்டி20 தொடரிலும் எம்ஐ லண்டன் மற்றும் சதர்ன் பிரேவ் அணிகளின் உரிமையாளர்கள் மற்ற 15 நாடுகளைச் சேர்ந்த வீரர்களைத் தேர்வு செய்த போதிலும், ஒரு பாகிஸ்தான் வீரரைக்கூட இதுவரை ஒப்பந்தம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் தலைமை நிர்வாகி டாம் மொஃபாட் இது குறித்துக் கூறுகையில், “ஒவ்வொரு வீரருக்கும் சமமான மற்றும் நியாயமான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். வீரர்களைத் தேர்வு செய்வதில் உரிமையாளர்களுக்குச் சுதந்திரம் இருந்தாலும், அது பாகுபாடற்ற முறையில் இருக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரிச்சர்ட் கோல்ட், வீரர்களைத் தேர்வு செய்வதில் பாகுபாடு காட்டக்கூடாது என்று எச்சரித்திருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ளது இந்தத் தகவல் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.