காசாவில் கட்டடம் இடிந்து விழுந்து 20 பேர் உயிரிழப்பு: 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்

காசாவில் கட்டடம் இடிந்து விழுந்து 20 பேர் உயிரிழப்பு: 100-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தகவல்

காசாவில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டடம் இடிந்து விழுந்து பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசாவில் இஸ்ரேலின் போர்த் தாக்குதலில் பாதிக்கப்பட்ட 7 தளங்களைக் கொண்ட குடியிருப்புக் கட்டடம் இன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் 5 குழந்தைகள் உள்பட 20 பேர் பலியாகியுள்ளனர்.

இதனுடன், 14 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இடிபாடுகளுக்குள் சிக்கிய 100-க்கும் அதிகமான மக்களை மீட்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி, காசாவின் பொது பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில்,

கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருவதுடன், மாயமானவர்களைத் தேடும் பணிகளும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை, சுமார் 100-க்கும் அதிகமானோர் இந்தக் கட்டடத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.

இதனுடன், போதிய மீட்பு உபகரணங்கள் இல்லாதது மற்றும் இஸ்ரேல் விதித்துள்ள கட்டுப்பாடுகள் ஆகியவற்றால் அந்தப் பகுதியில் மீட்புப் பணிகள் மேற்கொள்வது மிகவும் சிரமமாகியுள்ளது. மேலும், இடிந்து விழுந்த குடியிருப்புக் கட்டடம் இஸ்ரேலின் போர்த் தாக்குதல்களில் சேதமடைந்திருந்ததாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இஸ்ரேலின் போரினால் காசாவில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. அடிப்படை வசதிகள் இல்லாததால், ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் சேதமடைந்த கட்டடங்களில் வசிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.