சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது திருவிக நகர் எம்எல்ஏ தாயகம் கவி, பேசுகையில் “திருவிக நகர் சட்டமன்றத் தொகுதி மண்டலம் 6, வார்டு 73-ல் அமைந்துள்ள புளியந்தோப்பு சமுதாய நல மருத்துவமனை 24 மணி நேர மருத்துவ மனையாக செயல்பட்டு வருகிறது. அங்கு 60 படுக்கைகள் மட்டுமே உள்ளது. அதை 100 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். அங்கு சிறப்பு மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், மயக்க மருந்து நிபுணர், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர் ஆகியோரை பணியமர்த்த வேண்டும்” என்றார்.

இதற்கு பதிலளித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில் \”நகர்ப்புறங்களில் மக்களின் நலவாழ்வை மேம்படுத்துவதற்காகவே, 708 நகர்ப்புற மருத்துவமனைகள் புதிதாக ஏற்படுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதில், சென்னையைப் பொருத்தவரை 200 மருத்துவமனைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒரு வார்டுக்கு ஒரு மருத்துவமனை என்று  பணிகள் துவங்கப்பட்டுள்ளது. திரு.வி.க., நகர் தொகுதியில் 7 வார்டுகள் உள்ளதால், அங்கு மட்டும் புதிதாக 7 மருத்துவமனைகள் அமைய உள்ளது. எனவே அங்கு ஏற்கனவே உள்ள சமுதாய நல மருத்துவமனையில் தற்போதுள்ள 60 படுக்கைகளே போதுமானது என்றார்.

தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் “மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் கட்டிடங்களை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவத்துறையில் காலியாக உள்ள 4,000 இடங்களை நிரப்ப முதலமைச்சரின் ஒப்புதலைப் பெற்று விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்காடு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக் கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” இவ்வாறு அமைச்சர் பதில் அளித்தார்.