சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் விக்னேஷ் சிவன் திருமண விவரங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். திருமணத்திற்கு முந்தைய சந்திப்பு நிகழ்ச்சியில், பேசிய அவர், இயக்குநர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பல பரிணாமங்களின்போது தொடர்ந்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தன்னுடைய அடுத்தகட்ட வாழ்க்கையை நோக்கி நகர்வதாக குறிப்பிட்டார்.

மேலும், திருப்பதியில் திருமணத்தை நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. சில சிக்கல் காரணமாக மாமல்லபுரத்தில் குறிப்பிட்ட சில பேர் முன்னிலையில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், திருமணம் முடிந்த பிறகு ஜூன் 11-ஆம் தேதி தானும் நயன்தாராவும் இணைந்து பத்திரிகையாளர்களை சந்திக்க இருப்பதாக கூறினார்.

மேலும், இந்து முறைப்படிதான் திருமணம் நடைபெறும் எனவும் அவர் அப்போது தெரிவித்து இருந்தார். இந்நிலையில், நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமண நிகழ்ச்சிக்கு 200 முக்கிய பிரபலங்களுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இந்த விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், சிரஞ்சீவி, சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, சமந்தா ரூத் பிரபு ஆகியோர் திருமணம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

இவர்களுடன் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என சொல்லப்படுகிறது. இவர்களின் திருமணத்திற்கு அதிகபடியான பார்வையாளர்கள் குவிய வாய்ப்பு உள்ளதாலும், மிக முக்கிய சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொள்ள இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.