காபூல்: ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் உடைமைகளை இழந்துள்ளனர். சமூக வலைதளங்கள் மூலமாக பலரும் அம்மக்களுக்கான உதவியை கொண்டு சேர்ப்பதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் புதன்கிழமை காலை 6.1 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள கோஸ்ட் நகரில் இருந்து சுமார் 44 கி.மீ. தொலைவில் பூமியில் 51 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்தது,

இந்த நிலநடுக்கத்தால் கோஸ்ட் மற்றும் பக்திகா மாகாணங்களில் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன. இதில், 1000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 600-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாகவும் தலிபான் அரசின் பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், நிலநடுக்கத்தினால் வீடுகளையும், தங்கள உடைமைகளையும் இழந்த மக்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது அனைவரையும் கலங்க வைக்கிறது.

தனது உடைமைகள் அனைத்தையும் இழந்த பெரியவர் ஒருவரின் கண்ணீர், இடிந்த வீட்டின் முன் நின்றுக் கொண்டிருக்கும் குழந்தை என அந்தப் புகைப்படங்கள் நீள்கின்றன.

ஆப்கன் நிலநடுக்கத்தினால் பாதிக்கப்பட்டு தங்களது உடைமைகளை முற்றிலும் இழந்த மக்களுக்கு நிதி சேர்க்கும் முயற்சிகள் நெட்டிசன்கள் பலரும் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையில், உலக நாடுகளிடம் தலிபான் அரசு உதவி நாடி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஆப்கனுக்கு உணவுப் பொருட்களை நிவாரண உதவியாக வழங்கியுள்ளன.