பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு.

பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் படப்பிடிப்பு கரோனா அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்டது. தற்போது கரோனா அச்சுறுத்தல் குறையத் தொடங்கியிருப்பதால் காரைக்குடியில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்கள் நடைபெறும் இந்தப் படப்பிடிப்பில் பெரும்பாலான காட்சிகளைப் படமாக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தை ‘சூர்யா 40’ என அழைத்து வந்தது படக்குழு. நாளை (ஜூலை 23) சூர்யா தனது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ளார். இதனை முன்னிட்டு ‘சூர்யா 40’ படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அறிவித்தது.

அதன்படி, இன்று (ஜூலை 22) மாலை 6 மணியளவில் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. ‘எதற்கும் துணிந்தவன்’ என்று பெயரிட்டுள்ளது படக்குழு. இதனை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இமான் பணிபுரிந்து வருகிறார். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகிறார்கள்.

#HBDSuriya #Suriya #HappyBirthdaySuriya #EtharkkumThunindhavan #Suriya40FirstLook #Pandiraj #SunPicters #FirstLook #எதற்கும்துணிந்தவன்