புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த சில மாதமாக ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது 100ஐ தாண்டி சென்றுள்ளது. நேற்று முன்தினம் 110, நேற்று 101 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர். தொற்று பரவலை தடுக்க மீண்டும் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என மத்திய அரசும் அறிவுறுத்தி வருகிறது. முதலமைச்சர் ரங்கசாமியும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில்  மாநில மேலாண்மைக்குழு கூட்டத்தில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலாண்மை குழுவில் எடுத்துள்ள முடிவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் வல்லவன் வெளியிட்டுள்ள உத்தரவில், நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதன்படி புதுவை அரசின் அனைத்து துறைகள், நிறுவனங்கள், கழகங்கள் கொரோனா குறித்த கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

சுகாதாரத்துறை மத்திய அரசின் அனைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகள், கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்துவதை உறுதிப்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் கல்வித்துறையின் அனைத்து உத்தரவுகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் மார்க்கெட், கடற்கரை சாலை, பூங்காக்கள், ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களுக்கு வருபவர்கள் கட்டாயம் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது அவசியம். வணிக, வர்த்தக நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் 100 சதவீதத்தினர் தடுப்பூசி செலுத்தியதை உறுதிப்படுத்த வேண்டும்.

அங்கு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சுகாதாரம், காவல், வருவாய், உள்ளாட்சி, தொழிலாளர் துறையினர் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இன்றி, முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும் உறுதி செய்ய வேண்டும்.

தேவையான கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் வணிகர்கள், விடுதிகள், ஓட்டல்கள், தொழிலதிபர்களுடன் பேசி தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற செய்ய வேண்டும். அண்டை மாநிலம், மாவட்டங்களோடு பேசி எல்லைகளில் தேவையான கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிமீறல் குறித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரைகளை அனுப்ப வேண்டும்.

இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது. புதுவை அரசு, துணைநிலை ஆளுநர் தமிழிசை ஒப்புதலோடு இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்படுகிறது. புதுவையில் கடந்த 2 ஆண்டாக இருந்த கொரோனா கட்டுப்பாடுகள் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதியுடன் தளர்த்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது.