இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் இரா. நல்லகண்ணு இன்று (பிப். 25) காலமானார். அவருக்கு வயது 101. ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர்.

வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், நேற்று உயிர் பிரிந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. முதுபெரும் அரசியல் தலைவர் நல்லகண்ணு உயிரிழப்பு குறித்து அரசு மருத்துவமனை தெரிவித்திருப்பதாவது,
நல்லகண்ணு அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக பிப்.1ஆம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 நாள்களாக சிகிச்சையின்போது அவரது உடல்நிலையில் ஏற்றத்தாழ்வுகள் இருந்து வந்தன. பல்துறை மருத்துவக் குழு தீவிர சிகிச்சையும் அதி தீவிர கண்காணிப்பையும் தொடர்ந்து வந்தனர்.
இன்று (பிப்.25) அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாகக் குறைந்தது. அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயலிழந்ததால் நல்லகண்ணு அவர்கள் பிப்.25 அன்று பிற்பகல் 1.55 மணியளவில் நம்மை விட்டு பிரிந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் உறவினர்களுக்கும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது என்று மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
நல்லகண்ணுவின் உடல் மருத்துவ மாணவர்களின் கல்விக்காக, தானமாக வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி அஞ்சலிக்காக, மறைந்த நல்லகண்ணுவின் உடல் மருத்துவமனையில் இருந்து, தியாகராய நகரில் உள்ள இந்திய கம்யூ. அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளது.
கட்சியினர், பொதுமக்கள் அங்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள போலீஸார் கட்சி அலுவலகத்துக்கு வருகை தந்துள்ள நிலையில், மாநகரக் காவல் கூடுதல் ஆணையர் நரேந்திரன் நாயர் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மறைந்த நல்லகண்ணுவின் உடல் இன்று மாலை 4 மணிக்கு மருத்துவமனையில் இருந்து இந்திய கம்யூ. கட்சியின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்படுகிறது.
இன்று மாலை 5 மணி முதல் நாளை (பிப்.26) மாலை 3 மணி வரை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர், ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு ஊர்வலமாகக் கொண்டு செல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரிக்கு நல்லகண்னுவின் உடல் தானமாக ஒப்படைக்கப்பட உள்ளது.
