குவைத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி (86) கொல்லப்பட்டார். ஏற்கெனவே இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்திய ஈரான், கமேனி கொலைக்கு பழிவாங்கும் வகையில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தங்கள் நாடு மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடியாக வளைகுடா நாடுகள் மீது ஈரான் 3-ஆவது நாளாக நேற்றும் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகள் மீது பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கு நாடான குவைத் மீது நேற்று ஈரான் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, அங்குள்ள அமெரிக்க தூதரக வளாகத்திற்குள் இருந்து தீப்பிழம்புகளும் புகையும் எழும்பின. அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட விடியோவில், அபாய எச்சரிக்கை ஒலி முழங்க, தூதரகப் பகுதியிலிருந்து புகை வெளியேறுவது பதிவாகியுள்ளது. இதனிடையே குவைத்தில் இருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், கட்டடங்களை விட்டு வெளியே வர வேண்டாம் என அமெரிக்கா கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தூதரகத்திற்கு யாரும் வர வேண்டாம் என்றும் அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் ஆலை மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஆலையில் தீ பற்றி எரிந்த நிலையில், உடனடியாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
