மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தவெக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமனம் செய்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிகளில், மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் அடுத்த மாதம் (அக்டோபர்) 6-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியுள்ள நிலையில், இடைத்தேர்தலிலும் த.வெ.க., தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் ஆகிய கட்சிகள் இடையே 4 முனைப்போட்டி நிலவுகிறது.
இதில், நாம் தமிழர் கட்சியை தவிர, தேர்தல் களம் காணும் 3 கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்) ஆகிய 2 பேரும் தற்போது த.வெ.க. சார்பில் அதே தொகுதிகளில் களம் காண்கின்றனர்.

பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. சார்பில் ஐ.பரந்தாமன் (மதுராந்தகம்), எஸ்.சுகன்யா (தாராபுரம்) ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க. சார்பில் கணிதா சம்பத் (மதுராந்தகம்), பானுமதி (தாராபுரம்) ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நாளை அறிவிக்க உள்ளது. இடைத்தேர்தல் என்ற போதிலும் கடுமையான போட்டி நிலவுவதால், வெற்றி பெற அரசியல் கட்சிகள் பல்வேறு வியூகம் வகுத்து வருகின்றன.
இந்நிலையில், தவெக தேர்தல் பொறுப்பாளர்களை நியமனம் செய்து அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ’’தேர்தல் கண்காணிப்பாளர்களாக அமைச்சர் என்.ஆனந்த், அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் நிர்மல் குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் பணிக்குழுவில், மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர் ராஜ்குமார், அமைச்சர் தென்னரசு, அமைச்சர் வினோத் மற்றும் துணைப் பொறுப்பாளர்களாக எம்.எல்.ஏ சரவணமூர்த்தி, எம்.எல்.ஏ தியாகராஜன், எம்.எல்.ஏ விஜயராஜ், எம்.எல்.ஏ காமாட்சி, எம்.எல்.ஏ பாலாஜி (எ) மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தாராபுரம் தொகுதி பொறுப்பாளராக அமைச்சர் அருண்ராஜ், இணைப் பொறுப்பாளர்களாக அமைச்சர் விஜய் பாலாஜி, அமைச்சர் விஜயலட்சுமி, அமைச்சர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் மற்றும் துணைப் பொறுப்பாளர்களாக பாலமுருகன் எம்.எல்.ஏ. – திருப்பூர் தெற்கு சட்டமன்றத் தொகுதி, சத்தியபாமா எம்.எல்.ஏ – திருப்பூர் வடக்கு சட்டமன்றத் தொகுதி, ராம்குமார் எம்.எல்.ஏ. – பல்லடம் சட்டமன்றத் தொகுதி, திலீப் எம்.எல்.ஏ – நாமக்கல் சட்டமன்றத் தொகுதி, சத்யா எம்.எல்.ஏ. – கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி.
மேற்கண்ட குழுவினர், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வார்கள். தேர்தல் கண்காணிப்பாளர்கள், இரண்டு தொகுதிகளின் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பார்கள். அந்தந்தச் சட்டமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட கழகத் தோழர்கள் அனைவரும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும். விசில் சின்னம், மீண்டும் வாகை சூட வேண்டும்.
இடைத்தேர்தல் வரலாற்றிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர் என்கிற புதிய வரலாறு படைக்கும் வகையில் அனைவரும் தேர்தல் பணியாற்றிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். இந்தத் தொகுதிகளில் நம் வெற்றி வேட்பாளர்களுக்கு ஆதரவாக நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளைத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக விரைவில் முன்னெடுப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
