ஆசிரியர்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவதா?: அரசுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்

ஆசிரியர்கள் மீது நிதிச் சுமையை ஏற்றுவதா?: அரசுக்கு முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கண்டனம்

ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வலியுறுத்தியுள்ளார்.

காமராஜர் காலை உணவுத் திட்டம் வருகிற செப். 17 ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கிவைக்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை சொந்த செலவில் செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது நடைமுறையில் உள்ள காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டு ‘காமராசர் காலை உணவுத் திட்டம்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டு வருகிற செப். 17 ஆம் தேதி விருதுநகரில் செப். 17 ஆம் தேதி முதல்வா் ச. ஜோசப் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.

இந்நிலையில் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் தொடர்பான தேவைகள் அனைத்தையும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் சொந்த செலவில் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையிட்டிருக்கிறது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித் துறை முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், ’’நிர்வாகத் திறனற்ற டேக் டைவர்ஷன் (Take Diversion) அரசு பெயர் மாற்றத்தில் காட்டும் ஆர்வத்தை முறையான நிதி ஒதுக்கீட்டில் காட்டுவதில்லை.

முதலமைச்சர் காலை உணவுத் திட்டத்தை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்து, அதற்கான பெயர்ப் பலகை மாற்றுவதற்கான செலவை ஆசிரியர்கள் மீதே சுமத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பலகையை மாற்றச் செலவு செய்வதோடு மட்டுமல்லாமல், மாற்றியதற்கான ஆதாரமாகப் பெயர்ப் பலகையோடு நின்று புகைப்படமும் எடுத்து அனுப்ப வேண்டுமாம். இதுபோல ஆசிரியர்களின் மீது நிதிச் சுமையை ஏற்றுவதும், அவர்களைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கும் மனநிலையையும் இந்த அரசு உடனடியாக கைவிட வேண்டும்” என்று அதில் தெரிவித்துள்ளார்.