தி.மு.க. அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்.) கட்சிக்கு ஏன் ஒரு இடம்கூட வழங்கவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கேள்வி எழுப்பினார்.
தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் நெல்லையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தி.மு.க.வின் தயவில்தான் த.வெ.க. அரசு ஆட்சி அமைத்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், “108 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கூட்டணி கட்சிகளின் உறுப்பினர்களையும் சேர்த்து அமைச்சரவையில் இடமளித்து முதல்-அமைச்சர் விஜய் த.வெ.க. ஆட்சியை நடத்தி வருகிறார். இதில் யாருடைய தயவும் யாருக்கும் தேவையில்லை.

கூட்டணி கட்சிகளிடம் தி.மு.க. பண்ணையார் மனப்பான்மையுடன் நடந்துகொண்டது. காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகளின் வாக்குகள் இல்லாமல் இத்தனை ஆண்டுகளாக தி.மு.க. ஆட்சி அமைத்திருக்க முடியுமா? சுதந்திர இந்தியாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு தி.மு.க. அமைச்சரவையில் ஏன் ஒரு இடம்கூட வழங்கவில்லை? ஆனால், முதல்-அமைச்சர் விஜய், ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்று கூறியதை செயல்படுத்தி வருகிறார். எனவே, மக்களின் தயவில்தான் ஆட்சி நடக்கிறதே தவிர, வேறு யாருடைய தயவும் தேவையில்லை” என்று தெரிவித்தார்.